நிகழ்வுகளில் அமைப்பு எப்படி? ஜனவரி மழை எப்படி?

2023 ஜனவரி 9 அதிகாலை ஆய்வறிக்கை.

நிலநடுக்கோட்டு காற்று சுழற்சி விலகி செல்கிறது. சற்று தீவிரமும் குறைந்து காணப்படுகிறது. குளிர் காற்று தரையில் நுழைந்தாலும் வெப்பம் கிடைக்காமல் மழைக்கு சாதகம் இல்லாமல் போகிறது.

இன்று திருநெல்வேலி தென்காசி கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் நனைக்கும் மழைக்கு வாய்ப்பு. விருதுநகர் தேனி மாவட்டத்தின் மேற்கு பகுதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் இன்றும் மேகம் சூழ்ந்து குழப்பமான வானிலை கொடுக்கும். ஒரு சில இடங்களில் தூறலாம்.

பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

அடுத்தடுத்த நிகழ்வுகள்

அடுத்தடுத்து பசிபிக் பெருங்கடல் முதல் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் குமரிக்கடல் பகுதி வரை (பசிபிக் பெருங்கடல், தென் சீனக்கடல், தாய்லாந்து வளைகுடா, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிகளில் ) நிகழ்வுகள் நீடிக்கின்ற காரணத்தினால் தென் அரைக்கோளம் நோக்கிச் செல்லும் வட துருவ குளிர் அலை பிரிக்கப்பட்டு தென் அரைக்கோளம் நோக்கி பயணிக்கிறது.

அடுத்த நிகழ்வு
ஜனவரி 12 13 14 15 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு தெற்கே மேற்கு நோக்கி நகரும்.
இதனால் கடலோர மாவட்டங்களில் குழப்பமான மேகமூட்டம் வானிலை ஆங்காங்கே லேசான தூறல் மழை வரை இருக்கும். பரவலாக இருக்காது .பெரும்பாலும் குளிர் வானிலை மேகம் சூழ்ந்து காணப்படும்.

தென் கடலோரம் ஜனவரி 14 15 நனைக்கும் மழை முதல் லேசான மழை தெரிகிறது.

அதற்கு அடுத்த நிகழ்வு

காற்று சுழற்சி ஜனவரி 18 முதல் 20 வரை இலங்கையை நெருங்கத் தொடங்கி ஜனவரி 21 முதல் 26 வரை தென்மேற்கு வங்க கடல் குமரி கடல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நீடித்து இலங்கைக்கு கனமழை பொழிவையும், தமிழகத்திற்கு ஆங்காங்கே ஆங்காங்கே நல்ல மழை பொழிவையும் கொடுக்க வாய்ப்பு தெரிகிறது.
இந்த நிகழ்வின் நெருக்கம், தீவிரத்தன்மை, வெப்ப குளிர் காற்று இணைவு அதாவது மழை வாய்ப்பு தீவிரத் தன்மை தொடர்ந்து ஆய்வில் இருக்கிறது. அனைத்தையும் ஒரு நாட்களில் உறுதிப்படுத்தலாம். ஆனால் ஜனவரி 20 முதல் 26 வரை இலங்கைக்கு மிக நெருக்கமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி இறுதி வார நிகழ்வு

ஜனவரி இறுதிவரை நிகழ்வு நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் நகர்ந்து கடலோரம் குழப்பமான வானிலை தூறல் மழை பொழிவையும் கொடுக்கும் என்று தெரிகிறது.

அனைத்து நிகழ்வுகளுக்கும் இன்னும் நாட்கள் இருக்கின்றன. வரக்கூடிய நாட்களில் துல்லியம் தெரியவரும்.

எது எப்படியோ அறுவடையை பாதிக்காத மழையாக இருக்கும். குழப்பும் வானிலை நனைக்கும் மழை ஆகியவற்றிற்கு மட்டுமே கூடுதல் வாய்ப்பு.

அச்சமின்றி இடைவெளி அறிந்து ஆறுவடை செய்க.

ந. செல்வகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *